1. செய்திகள்

Bharat Ratna விருது- ஒரே ஆண்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேர்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Bharat Ratna award in 2024

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி X வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

முன்னதாக, மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரத் ரத்னா வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகிய நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவி நரசிம்ம ராவ்:

நரசிம்ம ராவ் கடந்த 1921 ஆம் ஆண்டு ஆந்திராவின் கரீம்நகரில் பிறந்தார். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியினை படித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய பிவி நரசிம்ம ராவ், 1991-96 என 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதற்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.

சரண் சிங்:

1902 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் பிறந்த சரண் சிங், ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை பிரதமராகப் பதவி வகித்தார். 1937 ஆம் ஆண்டு சப்ராலியில் இருந்து முதன்முதலாக உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரத் ரத்னா விருது மறைந்த சரண் சிங்குக்கு வழங்கப்படுவது குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- “நாட்டிற்கு சரண் சிங் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளுக்காக இவ்விருதினை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் , எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தாலும், நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தாலும், அவர் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை எப்பொழுதும் விரைவுபடுத்தியதோடு, அவசரநிலைக்கு எதிராகவும் கடுமையாக நின்றார்” என புகழுரை வழங்கியுள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்:

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பிரபலமாக அறியப்படும் சுவாமிநாதன் 1925 ஆம் ஆண்டு பிறந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரியில் விலங்கியல் துறையில் பிஎஸ்சி பட்டமும், கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் வேளாண் அறிவியலிலும் பட்டம் பெற்றார். கடந்த 28.9.2023 அன்று மறைவெய்திய எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also: "பட்டினி இல்லாத இந்தியா தான் என் கனவு"- எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக (1961-72), ICAR இன் இயக்குநர் ஜெனரலாகவும், இந்திய அரசின் செயலாளராக (வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை) (1972-79), வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் (1979-80) பதவி வகித்துள்ளார். மேலும் அறிவியல் மற்றும் வேளாண்மை திட்டக்குழு (1980-82) உறுப்பினராகவும் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாகவும் (பிலிப்பைன்ஸ்) (1982-88) பணியாற்றியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார், இது அதிகரித்து வந்த விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் துயரங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டது. கமிஷன் 2006 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது மற்றும் அதன் பரிந்துரைகளில், குறைந்தபட்ச விற்பனை விலையானது (MSP) சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

சுவாமிநாதனுக்கு 1987 இல் முதல் உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை (MSSRF) நிறுவினார். சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெற செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

சுவாமிநாதனுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ராமன் மகசேசே விருது (1971) மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது (1986) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைத் தவிர, எச் கே ஃபிரோடியா விருது, லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது மற்றும் இந்திரா காந்தி பரிசு ஆகியவற்றையும் பெற்று உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999 ஆம் ஆண்டு 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புதிய உச்சமாக 5 பேருக்கு தற்போது வரை பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிப்பினைத் தொடர்ந்து பலரும் விருது பெற்றவர்களின் நினைவலைகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Read also;

PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

துவண்டு போகாத மனம்- தேனீ வளர்ப்பில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் கொளப்பலூர் மஞ்சுளா

English Summary: 5 person including MS Swaminathan were selected for Bharat Ratna award in 2024 Published on: 09 February 2024, 04:50 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.