3 lakh incentive for Salem Paddy Seed Bank maintenance farmers
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 இலட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 24 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதி என்ன?
பாரம்பரிய நெல் விதை வங்கி மூலம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும்.
விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் இரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பப் படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உழவன் செயலி மூலம் இடுபொருட்கள் பெறுதல்:
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் உழவன் செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப் பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்றுப் பயனடையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
திருப்பத்தூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்
Share your comments