
kalaignar magalir urimai thittam Scheme
தமிழக அரசின் சார்பில் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மையான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அன்றைய தினமே திட்டத்திற்கு விண்ணப்பித்து தகுதியானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 65 லட்ச பேருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு:
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு (18-09-2023) இன்று முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வரவு வைக்கப்பட்ட ரூ.1000-த்தினை மினிமம் பேலன்ஸ், நிலுவை கடன் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வங்கி பிடித்தம் செய்வதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுப்போன்ற அரசின் திட்டத்தில் வழங்கப்படும் தொகையினை வேறு காரணங்களுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை சில வங்கிகள் மீறியுள்ளது வருத்தத்துக்குரியது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி செயல்படும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
OTP- ATM பின் நம்பர் பகிர வேண்டாம்:
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைக்கிறோம் என அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் (OTP - One Time Password) அல்லது ATM அட்டையின் பின்பக்கத்தில் உள்ள மூன்று இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மேற்கண்ட தொகை திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும் எனவும் அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments